Friday 19 August 2022

*ஸ்தோத்திரப் பண்டிகைகள் தொடங்கப்பட்டதன் வரலாறு*


ஸ்தோத்திர பண்டிகை தொடங்க முன்னோடியாக இருந்தது மாம்பழச்சங்கப் பண்டிகையாகும் ஆதலால் அதைக்குறித்து சுருக்கமாக பார்த்து விட்டு ஸ்தோத்திரப்பண்டிகையின் தொடக்கத்தைக் காண்போம்

*ஸ்தோத்திரப்பண்டிகை தொடங்க காரணமாக இருந்த "மாம்பழச்சங்கப் பண்டிகை"*

நெல்லை அப்போஸ்தலர் ரேனியஸ் ஐயரவர்களின் காலத்தில் (1820-1838) திருநெல்வேலி மாவட்டத்தில் குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனித் திருவிழா மிகப் பிரபலமான ஒன்றாக இருந்தது.
அந்த முத்துமாலை அம்மன் கோயில் திருவிழாவிற்கு
அக்காலத்தில் பெருமளவில் கிறிஸ்தவர்களாக மதம் மாறி வந்த பிற்பட்ட சமூகத்தவர்கள் மாட்டு வண்டிகளில் கூட்டம்கூட்டமாக சென்று குரங்கணியில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கிற முத்துமாலை அம்மன் கோயிலை ஒட்டி இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருந்து தாமிரபரணி ஆற்றங்கரையோரம் இருக்கிற மரநிழலில் இளைப்பாறி தாங்கள் கொண்டு சென்ற ஆட்டுக்கிடாக்களை அடித்து சமையல் செய்து பெரும் குடும்பமாக ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு குரங்கணி முத்துமாலை அம்மனை வழிபட்டு அதன்பின் திரும்பி வரும் வழியில் அனைவருக்கும் தெரியும்படி மீதமுள்ள ஆட்டுக்கடா இறைச்சித் துண்டுகளை உப்புக்கண்டம் போட்டு கொண்டு வருவது வழக்கம் ஆக இருந்தது. அக்காலத்தில் கிறிஸ்தவர்களாக மதம்மாறிய பின்பும் குரங்கணி முத்துமாலையம்மன் திருவிழாவுக்கு பெருமளவில் திருச்சபை மக்கள் சென்று வந்தார்கள் அப்பொழுது இதைக் கண்ட Rev.ரேனியஸ் திருமண்டல அளவில் பெருவிழா ஒன்றை ஆரம்பிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டார்கள். அக்காலத்தில் காலரா, கொள்ளை காய்ச்சல் போன்றவற்றால் அநேக பகுதிகளில்
உபதேசிமார்கள் உபாத்தியாயர்கள் இள வயதிலேயே மரணமடைந்ததால் அவர்களது குடும்பங்கள் வறுமை நிலையை நோக்கி தள்ளப்பட்டது அவர்களுக்காக நிதி சேகரிப்பதற்கெனவும் திருநெல்வேலி திருமண்டலம் முழுவதிலுமுள்ள சபை மக்களுக்கு பெரியதொரு விழா எடுப்பதன் மூலமாக குரங்கணி முத்துமாலை அம்மன் திருவிழாவிற்கு கிறிஸ்தவர்கள் ஆனபின்பும் சென்றுவந்த சபை மக்களுக்கு ஒரு மாற்று ஏற்பாடாக இருப்பதற்காகவும் *பண்டிகைப் பெருவிழா* ஒன்றை குரங்கணி முத்துமாலை அம்மன் திருவிழா நடைபெறுகிற அதேநாளில் 09.07.1834 அன்று பாளையங்கோட்டையில் நடதத திட்டமிட்டார்கள் அதற்காக பாளையங்கோட்டையில் தற்போது நூற்றாண்டு மண்டபம் இருக்கிற பகுதியில் பெரிதான அலங்காரப் பந்தல் போடப்பட்டது. பண்டிகைக் குறித்த அறிவிப்பு திருநெல்வேலி திருமண்டலம் எங்கும் சபைகளில் சபை மக்களுக்கு கூறப்பட்டது சபை மக்கள் அனைவரும் மாட்டு வண்டிகளில் உற்சாகமாக குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் திருவிழாவுக்கு செல்வது போல பாளையங்கோட்டையில் நடைபெற்ற திருமண்டலத்தின் பெருவிழாவான மாம்பழச்சங்க பண்டிகைத் திருவிழாவுக்கு சென்று வந்தார்கள். 
தொடங்கப்பட்ட காலம் முதல் இன்று வரை இப்பண்டிகை ஜூலை 9 ஐ ஒட்டி வரும் புதன்கிழமை அன்று மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது .

 *ஸ்தோத்திரப்பண்டிகையின் தொடக்கம்*

திருநெல்வேலி திருமண்டலம் எஸ்.பி.ஜி 
மற்றும் சி. எம். எஸ் ஆகிய இரு மிஷனரி சங்கங்களின் மூலம் உருவானது முதன்முதலாக ஸ்தோத்திர பண்டிகை எஸ்.பி. ஜி மிஷனில் அக்காலத்தில் அதன் தலைமை இடமாக இருந்த நாசரேத்தில் 1884 இல் முதன்முதலாக தொடங்கப்பட்டது ஆனால் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் இப்பண்டிகை அங்கு நடைபெறவில்லை. முதன்முதலாக C.M.S
 மிஷனில் சிவகாசி சாட்சியாபுரம் சர்க்கிளில் தலைமை இடமாகிய சாட்சியாபுரத்தில் 1891 இல் சி.எம்.எஸ். தலைமை மிஷனரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட சர்ச் கவுன்சில் தலைவர் Rev.தாமஸ் உவாக்கர் ஐயரவர்களாலும் சாட்சியாபுரம் வட்டார தலைமை குருவானவரான Rev.சாமுவேல் பவுல் ஐயரவர்களாலும் தபச உற்சவப் பண்டிகை எனும் ஸ்தோத்திர பண்டிகை தொடங்கப்பட்டது 
அந்த பண்டிகை இன்றளவும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது 
மதுரை - இராமநாதபுரம் திருமண்டலத்தில் திருமண்டலப் பண்டிகை ஆக மிக முக்கியத்துவம் பெற்றதாக கொண்டாடப்பட்டு வருகிறது.

  *பண்டிகை நாட்கள்*

சாட்சியாபுரத்தில் முதன்முதலாக இப்பண்டிகை தொடங்கப்பட்ட காலத்தில் நான்கு நாட்கள் இப்பண்டிகை நடத்தப்பட்டது.பின் மூன்று நாட்கள் நடத்தப்பட்டது. இப்பண்டிகை மிக வெற்றிகரமாக நடைபெறுவதையும் சிவகாசி சாட்சியாபுரம் சர்க்கிளுக்கு உட்பட்ட அனைத்து சபை மக்களும் மிகுந்த உற்சாகத்தோடு இப்பண்டிகையில் பங்கு பெறுவதையும் கண்ட திருநெல்வேலி திருமண்டலத்தின் பிற சர்க்கிள்களின் தலைமைகுருமார்கள் தங்களுடைய சர்க்கிள்களின் தலைமை இடத்தில் ஸ்தோத்திர பண்டிகை என்றும் அறுப்பின் பண்டிகை என்றும் சேர்ப்பின் பண்டிகை என்றும் அழைக்கப்பட்ட இப்பண்டிகையை தொடங்கி கொண்டாட ஆரம்பித்தார்கள்.
 *கூட்டம்*
என திருநெல்வேலி திருமண்டல சபைமக்களால் இப்பண்டிகை பெரும்பான்மையோரால் அழைக்கப்பட்டது. தற்போது பெரும்பாலும் மூன்று நாட்கள் இப்பண்டிகை நடைபெறுகிறது.

*ஸ்தோத்திர பண்டிகை நடைபெறும் இடங்களும் அவை தொடங்கப்பட்ட ஆண்டுகளும் பின்வருமாறு*

1891 - சாட்சியாபுரம் (சிவகாசிசாட்சியாபுரம் சர்க்கிள்)
1892 - நல்லூர்
1893 - மெய்ஞானபுரம்
 1894 - டோனாவூர்
1894 -சுவிசேஷபுரம் 
1895 பாளையங்கோட்டை
 1896 - சுரண்டை 
1896 - பண்ணைவிளை  
1902 - இடையன்குளம் (செவல் சர்க்கிள்)
1919 - பொட்டல்பட்டி
1944 - குற்றாலம் (தென்காசி சர்க்கிள்)
1945 - கடையம் (அம்பாசமுத்திரம் சர்க்கிள்)
1966 - சீவலசமுத்திரம் (நல்லூர் சர்க்கிள்)
 1970 - கல்லிடைக்குறிச்சி (அம்பாசமுத்திரம் சர்க்கிள்)
1974 - அடைக்கலப்பட்டணம்(கோவிலூற்று சேகரம்)

*ஸ்தோத்திர பண்டிகை தொடங்குவதற்கான காரணங்கள்*

 பல கிராமங்களிலிருந்து பிற மதத்தினர் ஒன்றுகூடி மாட்டு வண்டிகளில் ஒன்றாக செல்வதும், ஆனி, ஆடி மாதங்களில் திருவிழாக்கள் கொடை விழாக்களுக்கு ஒன்றாகச் செல்வதும் குலதெய்வ கோயிலுக்கு பங்குனி உத்திரம் சிவராத்திரி போன்ற நாட்களில் குடும்ப சொக்காரர்கள் உடன்
( பங்காளிகள்) ஒன்றாக இணைந்து சென்று விழாக் கொண்டாடி வருவதும், செல்வதுமாக இருந்ததைக் கண்ட புதிய கிறிஸ்தவர்களும் தாங்களும் ஒன்றுகூடி அலங்காரப் பந்தலில் சபை குடும்பங்களாக சபை மக்களாக ஒருங்கிணைந்து ஆண்டவரை வழிபட வேண்டும் என்று விரும்பி வந்தார்கள். இவ்வாறான சபை மக்களின் விருப்பத்தை அந்தக்கால CMS மிஷனரிமார் அன்புடன் ஏற்றுக் கொண்டார்கள் இதுவே ஸ்தோத்திரப் பண்டிகைகள் தொடங்குவதற்கு மூலகாரணமாயிருந்தது.
இப்பண்டிகை ஆனி,ஆடி மாதங்களிலேயே நடைபெறுகிறது. குற்றாலம் பண்டிகை ஐப்பசி மாதம் நடைபெறுகிறது

*ஸ்தோத்திரப்பண்டிகை தொடங்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவுகள்*

 ஸ்தோத்திர பண்டிகைகள் தொடங்கப்பட்டதன் மூலம்
குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிதிருவிழா, சங்கரன்கோவில் ஆடித்தபசுதிருவிழா,
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா, 
பாபநாசம் காரையார் சொரிமுத்தையனார் கோயில் ஆடி அமாவாசை விழா, தேரிகுடியிருப்பு (தேரிச்சாமி, கற்குவேல் அய்யனார் ) மேலபுதுக்குடி (அருச்சுனனை காத்த அய்யனார்)
உவரி சுயம்புலிங்கசாமி போன்ற பல இடங்களில் இருந்த குலதெய்வ கோயில் திருவிழாக்கள் போன்றவற்றுக்கு கிறிஸ்தவர்களான பின்பும் பழைய பழக்கத்தை கைவிடாமல் சென்று வந்த கிறிஸ்தவர்கள் இந்த ஸ்தோத்திரபண்டிகைகள் தொடங்கப்பட்ட பின்பு அந்த இடங்களுக்குச் செல்லாமல் வண்டி கட்டி உற்சாகமாக ஸ்தோத்திர பண்டிகை நடைபெற்ற சர்க்கிள் தலைமை இடங்களுக்குச் சென்று வந்தார்கள் குறிப்பாக சுரண்டை வட்டாரத்தை சார்ந்தவர்கள் சுரண்டையில் நடைபெற்ற ஸ்தோத்திர பண்டிகைக்கும், நல்லூர் ஆலங்குளம் வட்டாரத்தை சார்ந்தவர்கள் நல்லூர் ஸ்தோத்திர பண்டிகைக்கும்,
 டோனாவூர் வட்டாரத்தை சார்ந்தவர்கள் டோனாவூர் ஸ்தோத்திர பண்டிகைக்கும், செவல்,இடையன்குளம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் இடையங்குளம் ஸ்தோத்திரப் பண்டிகைக்கும் 
தென்காசி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் குற்றாலம் ஸ்தோத்திரப் பண்டிகைகும்
அம்பாசமுத்திரம் கடையம் வட்டாரச் சபையார் கடையம் ஸ்தோத்திரப் பண்டிகைக்கும் சுவிசேஷபுரம் வட்டாரத்தைச் சார்ந்தவர்கள் சுவிசேஷபுரம் ஸ்தோத்திரப் பண்டிகைக்கும் மாட்டு வண்டிகள் மூலம் சென்று அந்த இடங்களில்
 மூன்று நாட்கள் தங்கியிருந்து அலங்கார பந்தலில் ஆண்டவரை வழிபட்டு திரும்பி வந்தார்கள் அதன் மூலமாக அவர்களுக்குள் ஐக்கியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது
தற்காலத்தில் மாட்டு வண்டிகளில் இப்பண்டிகைக்காக பயணம் செய்வது குறைந்துள்ளது
பேருந்து மூலமாக,
வேன் மூலமாக, கார் மூலமாக, இருசக்கர வாகனங்கள் மூலமாக குடும்பம் குடும்பமாக ஸ்தோத்திர பண்டிகைகள் நடைபெறும் இடங்களுக்கு சென்று ஆண்டவருக்கு நன்றி காணிக்கை செலுத்தி இறைவழிபாடு செய்து வருகின்றனர்.

      *பண்டிகைக்காக ஆயத்தங்கள்*

இந்த பண்டிகைக்காக பல மாதங்களுக்கு முன்பாகவே சபை மக்கள் பணம் சேர்த்து வருவது,
 உண்டியல் மூலம் பணம் சேகரிப்பது எனப் பல காரியங்கள் பழங்கால முதல் இன்றளவும் தொடர்கிறது. ஸ்தோத்திர பண்டிகைகள் சபைகளுக்குள்ளும்,
 சபை மக்களுக்குள்ளும் சபை ஐக்கியத்தை ஏற்படுத்தி இறைமக்களை ஒன்று கூட்டுகிறது.

         *ஸ்தோத்திர பண்டிகை நிகழ்வுகள்*

பொதுவாக ஸ்தோத்திர பண்டிகைகளில் முதலாம் நாள் ஆயத்த பவனி, ஆயத்த கொடியேற்றம், ஆயத்தஆராதனை கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறுகின்றன. இரண்டாம், மூன்றாம் நாட்களில் திருவிருந்து ஆராதனை,
 வருடாந்திர கூட்டம், பண்டிகை ஆராதனை போன்றவையும்
விளையாட்டு போட்டிகள்,
 மன்றாட்டு ஜெபம்,
 சிறுவர்களுக்கு வாலிபர்களுக்கு ஆண்களுக்கு பெண்களுக்கு என தனித்தனியே சிறப்பு ஜெபக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன இரண்டாம் மூன்றாம் நாட்களின் இரவுகளில் பஜனை பிரசங்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
அனைத்து நிகழ்வுகளிலும் கொடுக்கப்படுகிற ஆண்டவருடைய அருட்செய்தி சபை மக்களின் ஆவிக்குரிய வாழ்க்கையை ஆண்டவருடைய திருச்சமுகத்திற்கு நேராக கொண்டு செல்கிறது

         *பண்டிகைக்கால கடைகள்*

சிறுபிள்ளைகளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில்
இராட்டினங்கள்,
 மிட்டாய் கடைகள்,
 வளையல் கடைகள்,
விளையாட்டு பொருட்களுக்கான கடைகள் ,
குடும்பத்திற்கு தேவையான உணவு உபயோக பொருட்களுக்கான கடைகள்,
Refresh செய்வதற்காக தேனீர் கடைகள்,
வாய்க்கு ருசியான சிற்றுண்டி மற்றும் உணவு அளிக்கும் கடைகள் என பலதரப்பட்ட மக்களின் தேவைகளையும் நிறைவு செய்யும் வகையில் அமைக்கப்படுகின்ற கடைகள் என ஸ்தோத்திர பண்டிகைகள் அதை ஒட்டிய நிகழ்வுகள் திருச்சபை மக்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் மகிழ்ச்சியை கொடுக்கக் கூடியதாக அமைகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

*இறைமக்கள் வாழ்வில் ஸ்தோத்திர பண்டிகைகள்*

1.இறைமக்களை ஒன்று கூட்டுகிறது 

2.இறைமக்களை ஆண்டவருக்கு நேராகக் கொண்டு செல்கிறது 

3.இறை மக்களை மகிழ்ச்சிப்படுத்துகிறது

(ஜா.ஜான் ஞானராஜ் கல்லிடைக்குறிச்சி)

No comments:

Post a Comment