Friday 19 August 2022

*புனித பிரான்சிஸ் சவேரியார் - மறைப்பணியாளர் இந்தியாவின் பாதுகாவலர் பெருவிழா 03 12 2019*


*மறையுரைச் சிந்தனை*

தற்போது தமிழகத்தின் கடைகோடியிலுள்ள கோட்டாறு மறைமாவட்டத்தில் உள்ள தூய சவேரியார் பேராலயம் புனிதராலேயே நிறுவப்பட்டது என்பதை வரலாறு நமக்கு எடுத்துக்கூறுகிறது. அது தொடர்பான ஒரு நிகழ்வு. அந்த ஆலயம் கட்ட தூய சவேரியார் அப்போதைய திருவிதாங்கூர் மன்னரிடம் இடம் கேட்டபோது அவர், “அதெல்லாம் முடியாது” என்று மறுத்துவிட்டார். தூய சவேரியார் மீண்டுமாக அவரிடம், “எனக்கு ஓர் ஆட்டுத் தோல் அளவுக்கு இடம்கொடுத்தால் போதும், நான் அதில் ஆலயம் கட்டிக்கொள்கிறேன்” என்று சொல்லி ஓர் ஆட்டுத்தோலைக் காட்டினார். அதைப் பார்த்த மன்னர், இந்த ஆட்டுத்தோல் எவ்வளவு இடம் பிடித்துவிடப் போகிறது என்று எண்ணி, அதற்கு சரி என சம்மதம் தெரிவித்தார். 

அதன்பிறகு தூய சவேரியார் தன்னுடைய கையில் வைத்திருந்த ஆட்டுத்தோலை கீழே விரித்தார். அந்த ஆட்டுத்தோலானது ஏற்கனவே இருந்த அளவைவிட விரிந்துகொண்டே சென்றது. இதைப்பார்த்து திருவிதாங்கூர் மனனர் தூய சவேரியார் சாதாரண மனிதர் அல்ல, அவர் இறைவனுடைய அடியார் என்பதை உணர்ந்து ஆலயம் கட்ட போதுமான இடம் தந்தார். இதன் நிகழ்வுக்குப் பிறகு மன்னர் தூய சவேரியாரின் நண்பரானார். அதோடு மட்டுமல்லாமல் அந்த காலத்தில் கிறிஸ்தவர்களாக மதம்மாற இருந்த தடையும் நீக்கனார். 

தூய சவேரியார் எப்படி இறைவனின் கையில் வல்லமையுள்ள புனிதராக விளங்கினார் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது. ஆம், இன்று திருச்சபையானது இந்திய நாட்டின் திருத்தூதரும், மறைபரப்பு நாடுகளின் பாதுகாவலருமான தூய பிரான்சிஸ்கு சவேரியாரின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இன்றைக்கு நாம் அனைவரும் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம் என்று சொன்னால் அது தூய சவேரியால் ஆற்றிய பணியினால்தான் என்று சொன்னால் அது மிகையாது. 

இந்த நல்ல நாளிலே தூய சவரியாரின் வாழ்வும், பணியும் நமக்கு என்ன செய்தியைத் தருகின்றன எனச் சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

தூய சவேரியார் 1506ஆம் ஆண்டு, ஏப்ரல் 7ஆம் நாள், ஸ்பெயின் நாட்டில் வாழ்ந்த ஒரு பிரபுக்கள் குடும்பத்தில், யுவான் தெயாசு- டோனா மரியா என்ற தம்பதியின் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவரது தந்தை யுவான் தெயாசு, அந்நாட்டின் அரசவையில் நிதியமைச்சராகப் பணியாற்றி வந்தார்; சட்டவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.

 சவேரியார் தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, உயர்கல்வி கற்க விரும்பினார்; 1525 ஆம் ஆண்டு, உலகப் புகழ்பெற்ற பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்; அங்கே மெய்யியல் மற்றும் இறையியல் கற்கத் தொடங்கினார். 1530 ஆம் ஆண்டு மெய்யியல் முதுகலைப்பட்டம் பெற்றார். அதே பல்கலைக் கழகத்தில்தான், "நான் ஒரு சிறந்த பேராசிரியராக வர வேண்டும்' என்ற ஆசை கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில் 39 வயது நிரம்பிய "இனிகோ' என்ற "லொயோலா' என்பவரை சந்திக்க சவேரியாருக்கு வாய்ப்பு கிடைத்தது. இனிகோ, குருவாவதற்காக அங்கு படித்துக்கொண்டிருந்தார். அவர், சவேரியாரைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வார்த்தையைச் சொல்வார். அதாவது “பிரான்சிஸ், ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்துவிட்டால் அதனால் அவனுக்கு என்ன பயன்?'' என்பதே அந்த வாசகம். இந்த வார்த்தைகள் சவேரியாரின் மனதில் ஆழமாகப்பட்டது.

ஒரு நாள் சவேரியார், "தனது பணம், புகழ், பட்டம், ஆசை, ஆடம்பரம், உலக இன்பம் அனைத்தையும் துறக்க வேண்டும்; தானும் ஒரு குருவாக வேண்டும்; இறை மகன் இயேசுவின் பணியை- அவரது அன்பு, பாசம், பெருமை, இரக்கம், விட்டுக் கொடுக்கும் மனம் இவற்றை உலகமெங்கும் அறிவிக்க வேண்டும்' என்ற அணையாத தாகத்தைப் பெற்றார்; உடனே இயேசு சபையில் சேர்ந்தார். 1537 ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் நாள், குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 

அதன் பிறகு இயேசுவை பற்றியும், அவரது அன்புப் பணியைப் பற்றியும் அறிவிப்பதற்காக 1541 ஆம் ஆண்டு, ஏப்ரல் 7ஆம் நாள், ஸ்பெயின் நாட்டிலிருந்து சவேரியார் புறப்பட்டார்; 1542ஆம் ஆண்டு, மே மாதம் 6-ம் நாள் கோவா வந்து சேர்ந்தார். அங்கே சிறிய மணியை கையில் எடுத்து அடித்துக்கொண்டே கோவாவின் தெருக்களில் சென்று அனைத்துச் சிறுவர், சிறுமியர்களையும் அழைத்தார்; அவர்களுக்கு மறைக் கல்வி போதித்தார்; திருமறை நூலை விளக்கினார். நோயாளிகளைச் சந்தித்தார்; சிறையில் கைதிகளை பார்த்து ஆறுதல் கூறினார்.

பிறகு கோவாவிலிருந்து கேரளா வழியாக தென் தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கி இறைப்பணியாற்றினார் சவேரியார். குறிப்பாக கன்னியாகுமரி, கோட்டயம், குளச்சல், ஆலந்தலை, தூத்துக்குடி மற்றும் மணப்பாடு பகுதிகளில் தங்கி இறைப் பணியாற்றி வந்தார்.

  மணப்பாட்டில் அவர் தங்கியிருந்த குகை, மற்றும் அதற்குள் இருக்கும் சிறிய கிணறு ஆகியன இன்றும் உள்ளன. அந்தக் கிணறு, கடற்கரையில் உள்ளது. ஆனால் அதன் தண்ணீர் உப்பு இல்லாத நல்ல குடிநீராக இன்றும் புதுமையாக இருக்கிறது. 1545ல் சென்னை மயிலாப்பூரில் ஐந்து மாதங்கள் பணியாற்றினார் சவேரியார். பிறகு 1545ஆம் ஆண்டு "மலக்கா' தீவிற்குச் சென்று இறை பணியாற்றினார். பிறகு மீண்டும் இரண்டு ஆண்டுகள் கொச்சியிலும், கோவையிலும் சேவை செய்தார். மீண்டும் 1545-ல் ஜப்பான் சென்று, அங்கும் இயேசுவின் பணியைச் செய்து வந்தார்.

சவேரியாருக்கு, "எப்படியும் சீனாவிற்கு செல்ல வேண்டும்; அங்கும் இயேசுவின் அன்புப் பணியை செய்ய வேண்டும்' என்ற ஆசை இருந்தது. அதன்படி 1552ஆம் ஆண்டு, ஏப்ரல் 17ஆம் நாள் சவேரியார் சீனாவிற்கு புறப்பட்டார். ஆனால் செல்லும் வழியில், சான்சியான் தீவில், 1552-ம் ஆண்டு- நவம்பர் 21ஆம் நாள், நோயுற்றுப் படுத்தார். காய்ச்சல் தீவிரமடைந்தது. அவருக்கு உதவியாக "அந்தோணியோ' என்பவர் கூடவே இருந்தார். 1552ஆம் ஆண்டு, டிசம்பர் 3ம் நாள், சவேரியார் தனது கையில் வைத்திருந்த சிலுவையை தூக்கிப் பிடித்தவராக, "ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்! நான் ஒரு போதும் வெட்கமடைய விடாதேயும்'' என்ற வசனத்தை சொன்னவாறே தனது உயிரை இறைவன் கையில் ஒப்படைத்தார்.

இறந்த புனிதரின் உடல், முதலில் சான்சியன் தீவில் அடக்கம் செய்யப்பட்டது. 1553ம் ஆண்டு, பிப்ரவரி 17ம் நாள், சாந்தா குரூஸ் கப்பல் அங்கிருந்து புறப்படும்போது, சவேரியாரின் கூடவே இருந்த அந்தோணியோ, புனிதரின் கல்லறையைத் தோண்டி அவரது எலும்பையாவது இந்தியாவிற்கு கொண்டு செல்வோம் என்று முயற்சித்தார். அப்போது மிகப் பெரிய அதிசயம் அங்கே நிகழ்ந்தது. சவேரியாரின் உடல் எப்படி அடக்கம் செய்யப்பட்டதோ, அதேபோல இருந்தது. ஆம் தூய சவேரியாரின் உடலில் எந்தவித மாற்றமோ, துர்நாற்றமோ இல்லை. 

1554ஆம் ஆண்டு, மார்ச் 16ஆம் நாள், சாந்தா குரூஸ் கப்பலில் புனிதரின் உடல், கோவா கொண்டு வரப்பட்டது. "பாம் இயேசு தேவாலயத்தில்' மிகவும் பாதுகாப்புடன், கோவா அரசாங்கத்தின் உதவியுடன் இன்றுவரை அந்த உடல் பாதுகாக்கப்படுகிறது. 

தூய சவேரியாரின் வாழ்வை ஆழ்ந்து உற்று நோக்கும்போது நாம் கண்டுகொள்ளக்கூடிய ஓர் ஆழமான உண்மை அவரிடம் இருந்த நற்செய்தி அறிவிற்கான தாகம்தான். அறியாத இடத்தில், புரியாத மொழி பேசும் மக்கள் மத்தியில் அவர் ஆற்றிய நற்செய்திப் பணி இன்றைக்கும் நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. எனவே அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவிக்க முன்வரவேண்டும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னுடைய சீடர்களுக்குக் கொடுக்கும் அழைப்பும் இதுவாகத்தான் இருக்கின்றது. ஆகவே கிறிஸ்தவர்களாகிய நாம், கிறிஸ்துவை இன்னும் அறியாத மக்களுக்கு அவரைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க முன்வருவோம். அப்படி நற்செய்தியை அறிவிக்கும்போது அது நம்முடைய கடமை என்பதை உணர்ந்து செயல்படுவோம். (முதல்வாசகம்)

ஓர் ஊரில் பெரியவர் ஒருவர் இருந்தார். அவர் ஒவ்வொருநாளும் அவ்வூரில் இருந்த மருத்தவமனைக்குச் சென்று, அங்கே இருந்த நோயாளிகளுக்கு விவிலியத்திலிருந்து ஒருசில பகுதிகளை வாசித்துக்காட்டி, விளக்கம் அளித்து வந்தார். பெரியவருடைய இந்த நற்செய்தி அறிவிப்புப் பணி அங்கிருந்த நோயாளிகளுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது.

நாட்கள் செல்ல செல்ல அவருக்கு கண்பார்வை மங்கியது. அப்போது அவரைச் சோதித்துப் பார்த்த மருத்துவர் அவரிடம், “நீங்கள் நீண்ட நேரம் எதையும் கூர்ந்து படிக்கவேண்டாம்” என்று சொல்லி அனுப்பிவைத்தார். அவர் தனக்கு கண்பார்வை மங்கியபோதும் தன்னால் முடிந்த அளவுக்கு விவிலியத்தில் இருக்கும் சில முக்கியமான பகுதிகளை மனப்பாடம் செய்தார்.
 
தனக்கு கண்பார்வை முற்றிலுமாக போனபோதும் ஒவ்வொருநாளும் தவறாமல் மருத்துவமனைக்குச் சென்று, தான் மனப்பாடம் செய்த பகுதிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி நற்செய்திப் பணி செய்தார். இவ்வாறு அந்த பெரியவர் தான் இறக்கும்வரைக்கும் நற்செய்திப் பணியை தொடர்ந்து ஆற்றி நற்செய்திப் பணியாளராக வாழ்ந்தார்.

நாம் எல்லாருக்கும் நற்செய்தியை அறிவிக்கவேண்டும், அது முடியாவிட்டால் குறைந்தது நாம் இருக்கும் இடத்திலாவது நற்செய்தியை அறிவிப்போம் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது. 

ஆகவே தூய சவேரியாரின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரை நமக்குக் கொடையாகக் கொடுத்த இறைவனைப் போற்றுவோம். அதே நேரத்தில் அவரைப் போன்று நாமும் இயேசுவை பற்றி நற்செய்தியை அறிவிப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.  

- *மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.*


   *"GOD IS LOVE"*
To receive Daily gospel in Watsapp message to : 9986445900 
(Or)


No comments:

Post a Comment